Saturday, 14 July 2018

Super story

நள்ளிரவு ஒரு மணி...நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த
அடுக்கு மாடி குடியிருப்பில் கார்பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு லிப்டை நோக்கி போனார்கள் அந்த மூன்று இளைஞர்களும்.... லிப்ட் ரிப்பேர்...சரிசெய்ய இரண்டு நாளாகும் என்று லிப்ட் ஆபரேட்டர் சொன்னதை கேட்டு திகைத்துப் போனார்கள்... காரணம் அவர்கள் வீடு ஐம்பதாவது மாடியில் இருக்கிறது.....

வேறு வழியில்லை....  படியில் நடந்தேயாக வேண்டிய சூழ்நிலை... மூன்று பேரும் ஆளுக்கொரு கதை சொல்லிக்கொண்டே அலுப்பு தெரியாமல் நடந்து செல்வதென முடிவெடுத்தனர்....

முதலாமவன் ஓரு காமெடி கதை சொன்னான்... கதைமுடிய இருபத்தைந்தாவது மாடிக்கு வந்து விட்டார்கள்....  இரண்டாவது ஆள் ஒரு ரொமான்ட்டிக் காதல் கதை சொன்னான்....
கதை முடிய நாற்பத்தியெட்டாவது மாடிக்கு வந்துவிட்டார்கள்.... இப்பொழுது மூன்று பேரும் தொப்பலாய் நனைந்து போய் மூச்சு வாங்கினார்கள்.... மூன்றாவது ஆளிடம் நண்பா நாம வீடு வர்றதுக்கு இன்னும் இரண்டு மாடிதான் இருக்கு.... அதற்குள் முடியிர மாதிரி ஒரு குட்டி கதை சொல் என்றார்கள்....  அவன் சொன்னான்.... ஒரே வரியில் முடிகிற மாதிரி ஒரு திகில் கதை இருக்கு... அதுவும் உன்மை கதை... சொல்லவா என்றான்.... இருவரும் ஆர்வத்துடன் சொல்லுடா என்றார்கள்... அவன் சொன்னான்.....

"மச்சி வீட்டுச் சாவிய கார்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன்"
🤣🤣🤣🤣

வாழ்க்கை...

வயதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.
மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு  அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! ‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.
நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்.